HomeCropநாற்றங்கால் வளர்ப்பு: வலுவான மற்றும் ஆரோக்கியமான நாற்றுகளுக்கான திறவுகோல்

நாற்றங்கால் வளர்ப்பு: வலுவான மற்றும் ஆரோக்கியமான நாற்றுகளுக்கான திறவுகோல்

ஆரோக்கியமான விதைகளை விதைப்பது அல்லது ஆரோக்கியமான நாற்றுகளை நடுவது ஆரோக்கியமான மற்றும் நல்ல விளைச்சல் பயிரை அடைவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். காய்கறிகள், பழங்கள் மற்றும் அலங்கார செடிகள் உட்பட பல்வேறு பயிர்களுக்கு நாற்றங்கால்களில் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. நாற்றங்காலில் நாற்றுகளை வளர்ப்பதன் நன்மைகள் மற்றும் சவால்கள் மற்றும் நாற்று பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான சிறந்த நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் வாயிலாக அறியலாம்.

நாற்றங்காலில் இனப்பெருக்கம் செய்யப்படும் பயிர்களின் நாற்றுகள்

குறிப்பிட்ட பயிர்களின் விதைகள் அதிகபட்ச முளைப்பு எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை அடைய பாதுகாக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் முதலில் நாற்றங்காலில் வளர்க்கப்பட்டு, பின்னர் பிரதான வயலுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

அவ்வாறு நாற்றங்காலில் பொதுவாக வளர்க்கப்படும் பயிர்கள்

  • காய்கறி பயிர்கள்: தக்காளி, மிளகாய், கத்திரி, வெங்காயம், பந்தல் காய்கறிகள் மற்றும் ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பிராசிக்கா குடும்ப பயிர்கள்.
  • பழ பயிர்கள்: ஆப்பிள், பீச், திராட்சை, சிட்ரஸ் (ஆரஞ்சு, எலுமிச்சை,லைம்), ஸ்ட்ராபெரி, கிவி.
  • அலங்கார பயிர்கள்: ரோஜாக்கள், சாமந்தி, செவ்வந்தி, லில்லி, ஜெர்பரா, சம்பங்கி.
  • வயல் பயிர்கள்: நெல், கரும்பு, புகையிலை
  • தோட்ட பயிர்கள்: தென்னை, தேயிலை, காபி, ரப்பர், எண்ணெய் வித்துக்கள்.

நாற்றங்காலில் நாற்றுகளை வளர்ப்பது ஏன் முக்கியம்?

  • நாற்றங்கால் வெப்பநிலை, ஒளி மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் மீது சிறந்த கட்டுப்பாட்டை  வழங்குகிறது. நாற்றுகளுக்கு உகந்த வளரும் நிலைமைகளை உறுதி செய்கிறது.
  • இது விவசாயிகள் தாவரங்களை மிகவும் நெருக்கமாகக் கண்காணிக்க அனுமதிக்கிறது. இதனால் எழும் பூச்சி அல்லது நோய் பிரச்சனைகளை எளிதாகக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சையளிக்க முடிகிறது.
  • நாற்றங்கால்களில் வளர்க்கப்படும் நாற்றுகள் பொதுவாக ஆரோக்கியமானதாகவும், அதிக வலிமையுடனும் இருப்பதால், அவை வயலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. 
  • நீர், உரங்கள் மற்றும் பிற உள்ளீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை மிகவும் திறமையாக நிர்வகிக்க முடியும். இது கழிவு மற்றும் செலவுகளைக் குறைக்கும்.
  • நாற்றுகள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் மிகவும் சீரானதாக அதாவது ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் இது சீரான பயிர் தரம் மற்றும் எளிதான மேலாண்மைக்கு வழிவகுக்கும்.
  • முறையான முளைப்பு காரணமாக விலையுயர்ந்த விதைகளை இழப்பது குறைவுபடுத்தப்படும்.

நாற்றங்கால் வளர்ப்பு அமைப்பில் உள்ள கூறுகள் மற்றும் செயல்முறை

நர்சரிக்கு (நாற்றங்காலுக்கு) சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது

நாற்றங்கால் பகுதி சரியான வளர்ச்சியை உறுதிப்படுத்த போதுமான சூரிய ஒளியைப் பெற வேண்டும். எனவே இதற்கு, நாற்றங்கால் வைப்பதில் தென்மேற்குப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது விரும்பத்தக்கது. நீர் தேங்குவதைத் தவிர்க்க போதுமான வடிகால் வசதி உள்ள நாற்றங்கால் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு நீர் ஆதாரத்திற்கு அருகில் மற்றும் பொதுவாக நிழல் பகுதிகளுக்கு அருகில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வயல் நாற்றங்கால்களில், தேவைப்பட்டால் நிழல் வலைகள் மூலமாகவும் செயற்கை நிழலை வழங்கலாம். கூடுதலாக, நாற்றங்கால் பகுதிகளில் போதுமான கரிம பொருட்கள் இருக்க வேண்டும்.

நாற்றங்கால் வகைகள்

இரு முறைகளிலும், அதாவது பசுமை வீடுகள் மற்றும் நிழல் வலை வீடுகள் போன்ற பாதுகாக்கப்பட்ட கட்டமைப்புகளில்  நாற்றங்கால்களை வளர்க்கலாம்.

  • கள நாற்றங்கால்: வயலில் உள்ள நாற்றங்கால் இரண்டு வகைகளாக இருக்கலாம் – தட்டையான படுக்கை நாற்றங்கால் மற்றும் உயர்த்தப்பட்ட படுக்கை நாற்றங்கால். மண்ணில் களைகள், கட்டிகள் மற்றும் குச்சிகள் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக, 1 – 1.2 மீ அகலம், 15  செ.மீ உயரம் மற்றும் வசதியான நீளம் கொண்ட உயர்த்தப்பட்ட படுக்கைகளை தயார் செய்யவும். நல்ல நீர் வடிகால் திறன் கொண்ட மணலில் தட்டையான பாத்திகளை தயார் செய்யலாம்.
  • பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்: பாலி ஹவுஸ் / கிரீன் ஹவுஸ் (பசுமை வீடுகள்) மற்றும் நிழல் வலைகள் போன்ற பாதுகாக்கப்பட்ட கட்டமைப்புகளின் கீழ், பாலிதீன் பைகள் மற்றும் புரோட்ரேக்கள் (Protray) பொதுவாக நாற்றுகளை வளர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. குழிகளின் எண்ணிக்கை தட்டைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக 98 குழிகள் கொண்ட தட்டுகள் விரும்பப்படுகின்றன. குழிகளின் அளவு முக்கியமானது. ஏனெனில் இது பயன்படுத்தப்படும் ஊடகத்தின் அளவு மற்றும் நீர் வைத்திருக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. கிரீன்ஹவுஸ் (பசுமை குடில்) நர்சரிகளிலும் (நாற்றாங்கல்) பாலிபேக்குகளைப் பயன்படுத்தலாம்.

வளர்ச்சி ஊடகத்தின் தேர்வு

தாவரத்தின் வளர்ச்சி ஊடகங்களின் இரசாயன மற்றும் இயற்பியல் பண்புகள் ஆனது, வெற்றிகரமான நாற்றங்கால் உற்பத்திக்கு ஒரு முக்கிய காரணியாகும். உகந்த வேர் வளர்ச்சியானது ஊடகத்தின் ஈரப்பதம், காற்றோட்டம் மற்றும் ஊட்டச் சத்துக்களை வைத்திருக்கும் திறன் போன்ற ஊடகங்களின் இயற்பியல் பண்புகளைப் பொறுத்தது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான வளர்ச்சி ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். மணல் மற்றும் உரம் ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஊடகங்கள். 100% இயற்கையான, மக்கும் தன்மையுடைய, பஞ்சு போன்ற மற்றும் நார்ச்சத்து கொண்ட தேங்காய் மட்டையிலிருந்து நார்ச்சத்து பிரித்தெடுப்பதன் மூலம் கிடைக்கும் துணைப் பொருளான கோகோ பீட், புரோட்ரே நர்சரியின் வளர்ச்சி ஊடகத்தின் முக்கிய மூலப்பொருளாகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக 

N விகிதம் மற்றும் அதிக நீர் தாங்கும் திறன் கொண்டது. கிரீன்ஹவுஸ் காய்கறி நாற்றங்கால்களில் மண் இல்லாமல் சாகுபடி செய்வதற்கு இது ஒரு நல்ல வளர்ச்சி ஊடகம் ஆகும். மற்ற வளர்ச்சி ஊடகங்களில் பீட், பாசி, வெர்மிகுலைட், பெர்லைட் மற்றும் பியூமிஸ் ஆகியவை அடங்கும்.

நாற்றுகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, வளர்ச்சி ஊடகத்தின் கலவையையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, தர்பூசணி நாற்றுகளை வளர்ப்பதற்கு 1:1:1 விகிதத்தில் சிவப்பு மண், மணல் மற்றும் மடக்கிய தொழு உரம் கலவை பயன்படுத்தப்படுகிறது. வளரும் நாற்றுகளுக்கு கூடுதல் பலன்களுக்காக ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் போன்ற உயிர் உரங்களை வளர்ப்பு ஊடகங்களில் கலக்கவும். 98 குழிகளின் கூடிய ஒரு ப்ரோட்ரேவை நிரப்புவதற்கு தோராயமாக 1.2 கிலோ கோகோ பீட் தேவைப்படுகிறது.

விதைகள் அல்லது தாவரப் பரவல்களின் தேர்வு

குறைந்த பட்சம் 90% முளைப்பு சதவிகிதம் கொண்ட உயர்தர விதைகளைத் தேர்ந்தெடுக்கவும். அதிக வீரியமும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் விதை மூலம் பரவும் நோய்களிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். மேலும், பூச்சிகள் மற்றும் நோய்கள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் வீரியமுள்ள தாவரப் பரவல்களை (தாவரத்தின் வெட்டிய பகுதி, ஒட்டுகள், பதியம் (layers) சரியான நேரத்தில் தாய் தாவரத்திலிருந்து தேர்ந்தெடுக்கவும். உள்ளூர் வளரும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு விதைகள் அல்லது தாவர பரவல்களை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யவும். இது வெற்றிகரமான நாற்றங்கால் தயாரிப்பிற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நாற்றழுகல் நோயிலிருந்து பாதுகாக்க, விதைகளை விதைப்பதற்கு முன் டிரைக்கோடெர்மா விரிடியை 6 மில்லி/கிலோ விதைகள் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம்/கிலோ விதையில் கலந்து விதைக்க வேண்டும்.

நாற்றங்காலில் விதைகளை விதைத்தல் மற்றும் முளைத்தல்

நாற்றங்கால் படுக்கைகளை (கள‌ நாற்றங்கால்) தயார் செய்து, ப்ரோட்ரே/பாலிபேக்குகளை (பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்) வளர்ச்சி ஊடகத்தைக் கொண்டு நிரப்பவும். ஒரு குழி அல்லது ஒரு துளைக்கு 1 செமீ ஆழத்தில் 1-2 விதைகளை விதைக்கவும். வளர்ச்சி ஊடகத்துடன் விதைகளை மூடி வைக்கவும். நாற்றங்கால் பாத்திகளில் வரி விதைப்புகளை மேற்கொள்ளுங்கள். கருப்பு பாலிஎதிலீன் தாள் அல்லது உலர்ந்த வைக்கோல் அல்லது பற்களைக் கொண்டு நாற்றங்கால் படுக்கைகள் அல்லது ப்ரோட்ரேவை மூட வேண்டும். விதைப்புக்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், முளைப்பதைத் தொடங்குவதற்கு சாதகமான வெப்பநிலையை எளிதாக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

ஒரு நாற்றங்காலை பராமரிப்பதற்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள்

மண்வெட்டிகள், ரேக்குகள், கொத்துகள், சட்டுவக்கரண்டி மற்றும் கத்தரிக்கோல் போன்ற கை கருவிகள் வளரும் ஊடகத்தை தயார் செய்யவும், நடவு செய்யவும், நாற்றுகளை கவாத்து செய்யவும் தேவைப்படும். நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ரோஜா பூவாளிகள் அவசியம். நாற்றங்காலில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க மினி ஸ்பிரேயரை (சிறிய தெளிப்பான்) பயன்படுத்தவும்.

இளம் நாற்றங்கால் நாற்றுகளின் மேலாண்மை

  1. நீர்ப்பாசனம்: நாற்றுகளின் சிறந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு குறைந்த அழுத்தத்துடன் தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நாற்றுகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய ரோஜா பூவாளி மூலம் நீர்ப்பாசனம், மேல்நிலை நீர்ப்பாசனம்,சொட்டு நீர் பாசனம் அல்லது துணை நீர்ப்பாசனம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். வளரும் நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர்ப்பாசனம் ஆபத்தானது. ஏனெனில், இலை நோய்கள், கழுத்து மற்றும் வேர் நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காலையில் நீர்ப்பாசனம் செய்யவும். நீர் தேங்குவதைத் தடுக்க முறையான வடிகால் வசதி அவசியம்.
  2. ஊட்டச்சத்து: வளரும் இளம் நாற்றுகளுக்கு, கோகோபீட் அல்லது வளரும் ஊடகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தவிர, மற்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். ஊட்டச்சத்தை வழங்குவது கரிம அல்லது கனிமமாக இருக்கலாம். விதைப்பதற்கு பாத்திகளை தயார் செய்யும் போது தொழு உரங்களை சேர்த்துக்கொள்ளலாம். முளைத்த 12வது நாளில் NPK 20:20:20 உரத்தை ஒருமுறை தெளிக்கவும். நடவு செய்வதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு நுண்ணூட்ட கலவையை தெளிக்கலாம். எந்தவொரு ஊட்டச்சத்துக் குறைபாடும் தாவரங்களின் மோசமான மற்றும் குன்றிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றும் அதன் மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கும்.
  3. பூச்சிகள் மற்றும் நோய் மேலாண்மை: நாற்றங்காலில் உள்ள பொதுவான பூச்சிகளில் வெட்டுப்புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் (அசுவினி, இலைதத்துப் பூச்சி, செதில்கள் மற்றும் சிலந்திப் பூச்சிகள்) ஆகியவை அடங்கும். பொதுவான நோய்களில் கழுத்து அழுகல், நாற்றழுகல், வாடல் ஆகியவை அடங்கும். டிரைக்கோடெர்மா விரிடி-யை 10 கிராம்/லிட்டர் தண்ணீரில் அல்லது மான்கோசெப் 75% WP 3-4 கிராம்/லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்ற வேண்டும். பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதலின் அறிகுறிகளுக்கு தாவரங்களை தவறாமல் பரிசோதிக்கவும். வயல் சுகாதாரத்தைப் பின்பற்றி, பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் செடிகளை அகற்றவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1-2 மில்லி என்ற அளவில் வேப்ப எண்ணெயை வாரத்திற்கு இரு முறை தெளிக்கவும்.

பிரதான வயலில் நடுவதற்கு முன் நாற்றுகளை கடினப்படுத்துதல்

கடினப்படுத்துதல் என்பது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்து படிப்படியாக வளர்ந்த நாற்றுகளை இயல்பான தட்பவெப்ப நிலைக்கு வெளிப்படுத்தும் செயல்முறையாகும். இது உயிரற்ற காரணிகளின்(சுற்றுச்சூழல்) அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் நாற்றுகளை பிரதான வயலில் இடமாற்றம் செய்யும் போது, அதற்கு அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. நடவு செய்வதற்கு சுமார் 7-14 நாட்களுக்கு முன்பு கடினப்படுத்துதலை தொடங்க வேண்டும். ஒளியின் தீவிரத்தை மெதுவாக அதிகரிப்பதன் மூலம் அல்லது முழு சூரிய ஒளியில் நாற்றுகளை வெளிப்படுத்துவதன் மூலம், உரமிடுதல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலமாகவும் கடினப்படுத்துதலைச் செய்ய வேண்டும்.

நாற்றுகளை நடவு செய்தல்

நாற்றுகளை நடவு செய்வதற்கான சரியான நேரம் பயிரைப் பொறுத்தது.

சில பயிர்களுக்கு நடவு நேரம்

  • தக்காளி: விதைத்த 25-28 நாட்களுக்குப் பிறகு/5-6 உண்மையான இலை நிலை
  • மிளகாய்: விதைத்த 40-45 நாட்களுக்குப் பிறகு
  • முலாம்பழம்: விதைத்த 20-30 நாட்களுக்குப் பிறகு
  • வெங்காயம்: விதைத்த 42-48 நாட்களுக்கு பிறகு
  • கத்திரிக்காய்: விதைத்த 30-35 நாட்களுக்குப் பிறகு
  • சாமந்தி: விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு
  • செவ்வந்தி: விதைத்த 30-40 நாட்களுக்குப் பிறகு
  • காலிஃபிளவர்: விதைத்த 25 நாட்களுக்கு பிறகு

➤ நாற்றுகளை நடவு செய்யும் நேரம் அல்லது நடவு செய்வதற்குத் தேவையான நாற்றுகளின் வயதை தீர்மானிக்க ஒரு கட்டைவிரல் விதி உள்ளது. தாவரமானது அதன் வாழ்க்கைச் சுழற்சியில் 1/4 பங்கை நாற்றங்காலில் செலவிட வேண்டும்.

நாற்றங்காலில் நாற்றுகளை வளர்க்கும்போது தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்

  • நாற்றுகளுக்கு அடிக்கடி அல்லது அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவது, செடியை நீரில் மூழ்கடிக்கும் அல்லது பூஞ்சை நோய்களுக்கு வழிவகுக்கும். மேல் மண் காய்ந்தவுடன் மட்டும் தண்ணீர் ஊற்றி நன்கு வடிகால் வசதி கொண்ட மண் கலவையைப் பயன்படுத்தவும்.
  • இதேபோல், நாற்றுகளுக்கு போதுமான அளவு தண்ணீர் விடாமல் அலட்சியம் செய்வது அவை வாடி இறந்து போக வழி வகுக்கும்.
  • அதிக கரையக்கூடிய உப்புகள் கொண்ட பாசன நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இந்த உப்பு திரட்சியானது நாற்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.
  • நாற்றுகளுக்கு குறிப்பிட்ட மண் தேவைகள் உள்ளன. கனமான, சுருக்கப்பட்ட மண் அல்லது அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட மண் கலவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது வேர் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • நாற்றுகளை மிக ஆழமாக நடுவது வேர் வளர்ச்சியைத் தடுத்து, வளர்ச்சி குன்றுவதற்கு வழிவகுக்கும். எனவே, சரியான ஆழத்தில் நாற்றுகளை நடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • தவறான இடைவெளியைக் கடைப்பிடிப்பது நாற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் அல்லது அதிக கூட்ட நெரிசலை ஏற்படுத்தலாம்.
  • மோசமான காற்றோட்டம் பூஞ்சை நோய்களுக்கு வழிவகுக்கும் மற்றும் நாற்று வளர்ச்சியைத் தடுக்கிறது. போதுமான காற்று சுழற்சியை வழங்குவதை உறுதிசெய்து, நாற்றுகளின்  கூட்ட நெரிசலை தவிர்க்கவும்.
  • நாற்றுகளை கடினப்படுத்துவதை புறக்கணிப்பது அழுத்தத்தை உண்டாக்கி வளர்ச்சி குன்றிய அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.
  • பூச்சிகள் மற்றும் நோய்களைக் கண்காணிக்கத் தவறினால், நாற்றங்காலில் விரைவாகப் பரவி இளம் நாற்றுகளை நாசம் செய்துவிடும்.
spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்